ஆர்தர் தாமஸ் காட்டன்
படத்திலிருக்கும் இந்தச் சிலையை… ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா, கோதாவரி மாவட்ட கிராமங்களில் சர்வசாதாரணமாகப் பார்க்க முடியும்-நம்மூரில் அண்ணா சிலை இருப்பதைப் போல!
‘யாரு… என்.டி.ஆர். காருவா… ஓய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டிகாருவா…?’ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிடாதீர்கள்… இவர் சர் ஆர்தர் தாமஸ் காட்டன்!
அந்த இரண்டு மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்தர் காட்டனுடைய சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ‘கங்கை கொண்ட பகீரதன்’ என்று பெயர் சூட்டி, மக்கள் அவரை மனதார பூஜிக்கிறார்கள்!
அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடிக்க இவர் செய்தது… அணைகள் கட்டி, விவசாயத்துக்கான நீராதாரத்தைப் பெருக்கிக் கொடுத்ததுதான்
ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா நதியின் குறுக்கே கண்ணாவரம் என்ற இடத்திலும், கோதாவரியின் குறுக்கே தௌலெஸ்வரம் என்ற இடத்திலும் இவர் கட்டிய அணைகள்தான், இன்று சுமார் 10 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசன வசதியைத் தந்து, பல லட்சம் விவசாயிகளுக்கு வாழ்க்கை கொடுத்து கொண்டுள்ளது.
தமிழகத்திலும்கூட… இவருடைய சேவைக் கரங்கள் நீளத்தான் செய்தன. கொள்ளிடம் நதியின் குறுக்கே தஞ்சாவூர்-கடலூர்-அரியலூர் மாவட்ட எல்லையில் இவர் ஏற்படுத்திய அணை (அணைக்கரை), பல லட்சம் விவசாயிகளை இன்றளவும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், இவருடைய பெயர்கூட தமிழகத்தில் யாருக்காவது தெரியுமா… என்பதே சந்தேகம்தான். இத்தகைய அணைகளை உருவாக்குவதற்காக ஆர்தர் காட்டன் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அடகு வைத்தார் என்பது எத்தனை பெரிய தியாகம். இத்தனைக்கும் நம்மை அடக்கி ஆள்வதற்காக இங்கே வந்து சேர்ந்த ஆங்கிலேயப் பட்டாளத்தில் இவரும் ஒருவர் என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.
ஆர்தர் காட்டன், 15 வயதிலே இங்கிலாந்து ராணுவத்தில் சேர்ந்து, கட்டுமானப் பொறியாளராகத் தேர்ச்சி பெற்றவர். 18 வயதில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு, அப்போதைய தலைமைப் பொறியாளரிடம் பணிக்கு அமர்த்தப்பட்டார்.
‘வந்தோமா, அனுபவிச்சோமா…’ என்றில்லாமல், ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்று கடமை உணர்வோடு பணியாற்றிய ஆங்கிலேயே அதிகாரிகளும் அப்போது இருக்கத்தான் செய்தார்கள். அவர்களில் ஒருவராக சுற்றிச் சுழன்றார் ஆர்தர் காட்டன்.
”இந்திய நாட்டின் வறுமையைப் போக்க ஒரே மருந்து… இந்த தேசத்தின் நீர் வளத்தை சிறப்பாக பயன்படுத்துவதுதான்” என்று சொன்னவர், வெய்யில், மழை என்று பாராமல் தென் இந்திய நதிகளின் மூலம் முதல் சங்கமம் வரை குதிரையில் தனித்துப் பயணம் செய்து, அளவை மற்றும் வரைபடம் தயார் செய்தார். காடு, மேடுகளில் திரிந்ததில் பல தடவை விஷக் காய்ச்சலில் சிக்கி, உயிர் பறிபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
பணியின் மீதான… மக்களின் மீதான ஆர்வத்தால், தன் சொந்தக் குடும்பத்தைக் கூட கவனிக்காமல், வேலை… வேலை என்று அழைந்ததில் மனைவி கோபித்துக் கொண்டு இங்கிலாந்து சென்றுவிட்டார். இதற்கு நடுவே, காடுகளில் குடியிருந்ததால் பாம்பு கடிக்கு தன் செல்ல மகளை வேறு பறிகொடுத்தார். அப்படியும் கூட தன்னுடைய முயற்சிகளில் இருந்து ஆர்தர் காட்டன் பின்வாங்கவே இல்லை.
”ஏய்யா… காட்டன், இந்திய நாட்டு மக்களுக்காக நீ ஏன் உன் சொந்தக் குடும்பத்தை, சுகத்தையெல்லாம் தியாகம் செய்யணும்?” என்று மூத்த அதிகாரிகள் கேட்டபோது, ஆர்தர் சொன்ன பதில், ”நான் இந்திய மக்களை காதலிக்கிறேன்” என்பதுதான். அதில் கடைசி வரை சமரசம் செய்து கொள்ளாதவராக வலம் வந்தார் ஆர்தர் காட்டன். அதன் பலனாக நமக்குக் கிடைத்த நீர்ப் பாசனத் திட்டங்கள்… இன்றைக்கும் தென்இந்தியாவில் நிலைத்து நின்று பலன் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
அப்படியிருக்கும்போது… ஒவ்வொரு வீட்டிலும், ஆர்தர் காட்டனுக்கு சிலை வைத்தாலும் கூட பொருத்தமானதாகத்தான் இருக்கும்!
நன்றி-பசுமை விகடன்.
எங்கேயோ பிறந்து இந்த மண்ணின் மீது காதல் கொண்டு தன் சுக துக்கங்களை தவிர்த்து தொலை நோக்கோடு திட்டங்கள் பல தீட்டி செயல்படுத்திய இவரைப் போன்றோர் ஒருபுறம்.
இங்கேயே பிறந்து வளர்ந்து மண்ணுக்காக இல்லாமல் “சொந்த மக்களுக்காக” தொலை நோக்கோடு திட்டங்கள் தீட்டுபவர்கள் இன்னொரு புறம்.பாலங்கள் கட்டியதையும், சாலைகள் அமைத்ததையும் கூட தம் ஆட்சிகளின் சாதனையாக சொல்லிக் கொள்கிறார்கள். மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதன்பது ஒரு அரசாங்கத்தின் கடமை தானே, இதில் சாதனை என்று சொல்ல என்ன இருக்கிறது.போகிற போக்கில் மழை பெய்வதையும்,வெயில் அடிப்பதையும் கூட தங்களின் சாதனையாக் கூறிக் கொள்வார்கள் போல!!!!!!!!!!
திட்டங்கள் தீட்ட முதல்வர்,செயல்படுத்த அமைச்சர்கள்,அவற்றை கண்காணிக்க துணை முதல்வர்,இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத இந்த முறை தமிழகத்தில் மட்டுமே உள்ளது என நம் நிதியமைச்சர் சொல்கிறார்.அதில் அநேகமான திட்டங்கள் மக்களுக்கு இலவச பொருட்கள் வழங்குபவை.
கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ஒரு தொடரின் பாடல் வரிகள்,
“பசியென்று வருபவர்க்கு மீன் தரமாட்டோம்,சொந்தத்தில் மீன் பிடிக்க கற்றுக் கொடுப்போம்”
ஒரு பாடலசிரியருக்கு தெரிந்த இந்த விசயம் நாட்டை ஆள்பவருக்கு தெரியாமல் போனதில் ஆச்சரியமே.
Labels: மூகம்
நன்றி http://karisalkaran.blogspot.com/
Comments
Post a Comment