ஸ்ரீ அன்னை-அரபிந்தர்

அருள் பார்வைக்கு
புதுச்சேரியின் ஸ்ரீஅன்னை





’கடவுள் நீங்கள் விரும்புவதையெல்லாம் உங்களுக்குக் கொடுத்து விடுவதில்லை. எதை அடைய உங்களுக்குத் தகுதி இருக்கிறதோ அதை மட்டுமே கொடுக்கிறார்’
இப்பொன் வாசகத்திற்குச் சொந்தக்காரர் பிளாஞ்சி ராக்சேல் மிரா.
ஆனால் அப்படிச் சொன்னால் அவரை யாருக்கும் தெரியாது. ’மதர்’ என்றாலும் ’ஸ்ரீ அன்னை’ என்றாலும் தான் தெரியும்.

கலைகளுக்கும் செழுமைக்கும் சொந்தமான நாகரிக நாடான பிரான்ஸில் பிறந்த மிரா, இளம் வயதிலேயே ஆன்மீக ஆற்றல்கள் பெற்றவராக விளங்கினார். இந்தியத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்ட அன்னை. ஸ்ரீ அரவிந்தரை ஞானகுருவாகக் கனவில் கண்டார், பின் புதுச்சேரியை நாடி வந்து அவரையே முழுமையாகச் சரணடைந்தார். ஸ்ரீ அன்னை ஆனார்.

1878 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி பாரிசில் மிரா பிறந்தார். இளம் வயதிலேயே அறிவாற்றல் மிக்கவராகவும், எளியோருக்கு இரங்கும் குணம் கொண்டவராகவும் விளங்கினார். ஆன்மீக நாட்டம் கொண்டிருந்த அவருக்கு தினம்தோறும் தியானத்தில் ஆழ்வதும், இறை ஒளியை தரிசிப்பதும் வழக்கமாக இருந்தது. அவருக்கு அடிக்கடி ஒரு கனவு வரும். அந்தக் கனவில் மெள்ள மெள்ள தன் உடலை விட்டு வெளியேறுவார். வீடு, தெரு, நகரம் என எல்லாவற்றிலும் உயர்ந்து மேகக் கூட்டங்களினிடையே காட்சி அளிப்பார். பொன்னொளி வீசிக் கொண்டிருக்கும் அவர் உடலை, ஒளீவீசக் கூடிய ஒரு நீண்ட பட்டாடை தழுவிக் கொண்டிருக்கும். அவரை நோக்கி உலகின் எல்லாப் பக்கங்களிலிருந்தும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும், நோயாளிகளும், துன்பமுற்றவர்களும் வந்து நிற்பர். தனது கருணை பொங்கும் விழியால் அவர்களைப் பார்ப்பார். ஒளீவீசும் அவருடைய பட்டாடையைத் தொட்டவுடன் சிலருக்குப் பிணி தீரும். சிலருக்கு மகிழ்ச்சி உண்டாகும். சிலரது குறைகள் உடனடியாக விலகும். மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும், அவர்கள் தங்கள் இருப்பிடம் திரும்பிச் செல்வர். தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக இக்கனவு அவருக்கு வந்து கொண்டிருந்தது. பிற்காலத்தில் மிர்ரா அன்னையாக உயர்ந்த போது, அவர் அளித்த பால்கனி தரிசனத்திற்கு முன் மாதிரியாய் இக்கனவு அமைந்திருந்தது

பிரான்சில் அன்னை வசித்த போது அவரது கனவில் பல்வேறு ஆன்மீகப் பெரியவர்களும் தோன்றி பல உண்மைகளை அவருக்கு போதித்தனர். அவர்களுள் ஒளி வீசும் கண்களுடனும், நீண்ட தாடியுடனும் ஒரு மனிதர் அடிக்கடி வந்தார். அவர், இந்தியத் தத்துவங்கள் பற்றியும், வேத உபநிஷத்துகள் பற்றியும் எடுத்துரைத்தார். ஓவியத்தில் தேர்ச்சி பெற்றிருந்த அன்னை அவரது உருவத்தை ஓவியமாக வரைந்து கொண்டார். பிற்காலத்தில் புதுச்சேரியில் ஸ்ரீ அரவிந்தரைத் தரிசித்த போது, அவரே தனக்கு கனவில் வந்து பல உண்மைகளை போதித்த ஆசான் என்பதையும், அவரே தனது குரு என்பதையும் கண்டு கொண்டார். அவரையே முழுமையாகச் சரணடைந்தார். தனது ஆன்ம ஆற்றலால் ஸ்ரீ அன்னையாக உயர்ந்தார். ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தை ஒரு முன் மாதிரி ஆசிரமாக உருவாக்கினார். இந்தியாவின் யோக ஞான மரபு செழுமையுற உழைத்தார்.

ஒரு முறை ஆசிரமத்தில் உள்ள சாதகர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அரவிந்தரால் ‘ஸ்ரீ அன்னை’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கும் அன்னையும் தங்களுடன் தற்போது இருக்கும் அன்னையும் ஒருவர் தானா என்று. தங்களின் சந்தேகத்தை அரவிந்தரிடமே கேட்டனர். அதற்கு ஸ்ரீ அரவிந்தர் ’சந்தேகமென்ன. அந்தப் பராசக்தியே இங்கே மானிட உருவில் சாதகர்களை வழி நடத்திச் செல்ல முன் வந்திருக்கிறாள். இதில் ஐயமே வேண்டாம்’ என்று விடையளித்தார்.

பராசக்தியின் அம்சமான அன்னை சாதகர்களை பல விதங்களில் ஊக்குவித்தார். எப்போதும் சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டுவதன் அவசியத்தை எடுத்துரைத்தார். நேர்மை, உண்மை, சத்தியம், தூய்மை இவற்றைக் கொண்டதாக வாழ்வு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அவர் போதித்த தத்துவங்கள் எண்ணற்றவை. மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு சகோதரர்களாக ஒருமித்த உணர்வுடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் ‘ஆரோவில்’ நகரை நிர்மாணித்தார். இன்று அது ஒரு சர்வ தேச நகரமாகத் திகழ்கிறது.

ஸ்ரீ அன்னையால் பல்வேறு அற்புதங்களும் நிகழ்த்தப் பெற்றிருக்கின்றன.

ஒரு முறை ஸ்ரீ அன்னை ஆசிரமத்து சாதகர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென தனக்குள் சமாதி நிலையில் ஆழ்ந்தார். வெகு நேரம் கழித்தே அவர் தனது கண்களைத் திறந்தார். சாதகர்கள் காரணத்தை வினவிய பொழுது, தான் கிரீஸ் நாட்டிற்குச் சென்று விட்டு வந்ததாகவும், பல பக்தர்கள் மானசீகமாக தன் உதவி வேண்டி அழைத்ததால், சூட்சும உருவில் அங்கு சென்று உதவி விட்டு வந்ததாகவும் அன்னை குறிப்பிட்டார்.

அன்னையைத் தேடி நாம் செல்ல வேண்டியதில்லை. நாம் மானசீகமாக, உண்மையாக அழைத்தால் அங்கு ஸ்ரீ அன்னையே நம்மைத் தேடி வருவார். ஸ்ரீ அன்னையே சாதகர்களிடம் இது குறித்து, ‘நேர்மையான பிரார்த்தனைகள் யாவும் நிறைவேற்றப்படுகின்றன. ஒவ்வொரு அழைப்புக்கும் நிச்சயம் பதில் உண்டு’ என்று தெரிவித்திருக்கிறார். அதிலும் ஸ்ரீ அன்னை குறிப்பிட்டுள்ள மலர்களை வைத்து வணங்கும் பொழுது அவரது ஆற்றல் அங்கே பலவாறாகப் பெருகுகிறது. அன்னையின் அருளைப் பெறத் தேவை நம்பிக்கையும், அர்ப்பணிப்பு உணர்வும் மட்டுமே.
அன்னையை நினைத்தமாத்திரத்தில் உடல் கோளாறுகள் விலகுவது வழக்கம். நம் குரல் அன்னையின் சூழலை எட்டியவுடன், அவரை அறியாமல் சூழலிலிருந்து வரும் பதில் நோயைத் தீர்க்கும். அன்னைக்கு நோய் வந்ததில்லை. “திருவுருமாற்றம் ஏற்பட உடல் நோயை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்கிறார். யோகம் செய்வதால் பல நோய்களை அன்னை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. அது போல் ஒரு முறை அவர் கால் வீங்கியது. “காலையிலும், மாலையிலும் இறைவனுக்கு என் நோயையும், காலையும் அர்ப்பணித்தேன். அதுவே சிறந்த முறை” என்கிறார். நெடுநாளைக்குப் பின் கால்கள் குணமாயின.
ஸ்ரீ அன்னையின் அறிவுரைகள் சிலவற்றை அவரது பிறந்த நாளான இன்று நினைவு கூர்வோம்.

1. மனிதனின் அதிருப்திக்கு, சோகத்திற்கு, தோல்விகளுக்கு அவனுடைய தான் என்ற எண்ணமே, அகந்தையே மிக முக்கிய காரணம் ஆகிறது.

2.’பக்தி’ என்பது தனக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வது அல்ல. இறைவனுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வதே உண்மையான பக்தி.

3. நீ எப்படி இருந்தாய் என்பதை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே! எப்படி இருக்க விரும்புகிறாய் என்பதை மட்டும் நினை. நீ நிச்சயம் முன்னேறுவாய்.

4. நம் அவநம்பிக்கையே நம் குறைபாடுகளின் தோற்றுவாயாக இருக்கிறது. உயர்விற்குத் தேவை பூரண நம்பிக்கையே!

5. ஒருவன் எவ்வளவு நேரம் தியானம் செய்கிறான் என்பது ஆன்மிக முன்னேற்றத்தைக் காட்டாது. மாறாக தியானம் செய்ய எந்த முயற்சியுமே தேவையில்லை என்னும் நிலையை எட்டுவதே உண்மையான ஆன்மிக முன்னேற்றமாகும்.

6. இறைவனிடம், ‘நமக்கு அது வேண்டும், இது வேண்டும்’ என்று வேண்டுவதை விட, நமக்குத் தேவையானது எதுவோ, அதை, அவனே தருமாறு ஒப்படைப்பது சிறந்தது. என்கிறார். மேலும் அவர்.

அன்னையின் குழந்தைப் பருவத்தில் நடந்த சில சம்பவங்கள் உணர்வுப்பூர்வமாக அமைந்தவை ஆகும்.


அன்னை எப்போதும் உள்நோக்குடைய குழந்தையாகவே இருந்திருக்கிறார் என்பது அவரின் நான்காவது வயதின்போதே வெளிப்பட்டது. அந்த நான்கு வயதில் அவர் அமர்வதற்காக அவருக்கென்று பிரத் யேக நாற்காலி ஒன்று செய்யப்பட் டது. அதில் மௌனமாக அமர்ந்து கொண்டு, தன்னுடைய மூளையை அதிவேகமாகச் சுழலச் செய்யும் அற்புதப் பேரொளி தனக்குள் இறங்கு வதாக அவர் சாதகம் செய்வார். அவருடைய தாயாரோ பகுத்தறிவா ளர். அதனால், தன் மகளின் தன் வயப்பட்டிருக்கும் நிலையைப் பார்த்து எரிச்சலடைந்ததும் உண்டு.

""உலகமே உன்னை அமுக்குவது போல, ஏன் இப்படி முகத்தை ஆடாமல் அசையாமல் வைத்திருக்கிறாய்?'' என்றார் ஒருநாள்.

அதற்கு ஸ்ரீ அன்னை அளித்த பதிலில் ஆன்ம ஆழம் இருந்தது... ""ஆமாம்; உலகின் துக்கமெல்லாம் என்னை அழுத்துவதை நான் உணரத் தான் செய்கிறேன்'' என்று அன்னை பதிலளித்தார். காரணம் அவரின் மேலிருந்து பாயும் பேரொளி... அதுவே பிற்காலத்தில் அவர் சிரத்தைச் சூழ்ந்திருந்த பிரபையாக மாறியது. அதனை இறுதிவரை உணர்ந்தி ருந்தார் ஸ்ரீ அன்னை.

""என்னுடைய குழந்தைப் பருவம் முதல், என் வாழ்வின் இறுதி வரை இதைப் பார்த்திருக்கிறேன். இதை அனுசரித்தே வந்திருக்கிறேன். இதுவே எனக்கு வழிகாட்டியாகவும் இருந்தி ருக்கிறது'' என்று அன்னையே கூறியிருக்கிறார்.

உலகத்திற்கும் மனித இன மேம்பாட்டிற்கும் ஒளிமயமான மகோன்னத எதிர்காலம் பற்றிய உணர்வில் அவருடைய குழந்தைப் பருவம் உருமாற்றமடைந்தது என்பதே உண்மை! உள் வயப்படும் உணர்வு பொதுவாகவே அவருடைய வாழ்க்கைச் சம்பவங்களிலிருந்து தெரிய வருகிறது. அவருக்கு சுமார் பன்னிரண்டு வயதானபோது அவருக்குள் ஒரு சூசகமான உணர்வு அமைந்தது. அதாவது... ஆர்வமிக்க மக்களைத் தலைமை தாங்கிப் புதுயுகமொன் றுக்கு அழைத்துச் செல்லும் முன்னோடியாக தான் விளங்க இருக்கும் உணர்வே அது...


அறிதற்கரிய இந்த உணர்வுகளே ஸ்ரீஅன்னை யின் இளமைப் பருவத்தில் இதயத்தை வருடிய தாக அமைந்தன. அதனால் ஒவ்வொருவரும் உணர்வின் உருமாற்றம் பெற்று தெய்வீக நற்பண்புகளுடன் திகழ்வதற்காகவே அனைவருக் கும் அழைப்பு விடுக்கிறார் ஸ்ரீ அன்னை.


ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக அவர் எழுதி வந்த குறிப்புகளே ஓர் ஆன்மிகக் காவியம்.
பொறுமையைப் பற்றி குறிப்பிடும்போது!
நீ ஒரு போதும் உணர்ச்சி வசப்படாதே! உணர்ச்சி வசப்படுவதால் பரபரப்பு ஏற்படுகிறது. அதற்கு இடம் தராதே!
உன்னுடைய பொறுமையை இழக்காதே!
எரிச்சல் அடையாதே!
உனக்கு எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்ப்பட்டாலும் நிர்ச்சலனமாக இருக்கப் பழகிக்கொள்.
இறை உணர்வு
நீ தியானம் செய்வதன் பொருட்டுத தனிமையான இடத்தில் அமர்ந்தாலும் சரி, ஏதாவது ஒரு வேலையை மேற்கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாலும் சரி. உனக்குத் தேவையான ஒரே விஷயம் இறைவனைப்பற்றிய இடைவிடாத உணர்வுதான்.
மௌனம்!
மனிதர்கள் பேசாமல் இருக்கக் கற்றுக்கொண்டால், எத்தனை எத்தனையோ தொல்லைகளைத் தவிர்த்துவிடலாம். எப்போதும் அமைதியாக இருந்து வலிமையைத் திரட்டுவாயாக!
இவ்வாறு செய்தால் அது வேலை செய்வதற்கு மட்டுமல்ல, உருமாற்றம் அடையவும் உதவும்.
தன்னம்பிக்கை
ஒரு மனிதனுக்குத் தன்னிடத்திலே அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் இருந்தது என்றால் , அவனால் எல்லாவித்த் துன்பங்களையும், என்ன விதமான சூழ்நிலைத் துயரங்களையும், மிகமிக மோசமானவை என்று கருதப்படுபவன்ற்றையும் எதிர்த்து நிற்க முடியும்.
இதற்குத் அவனுக்குத் தேவை ஊக்கமும், மனம் உடையாத மனோநிலைமையும் கூடத்தான்!
முதலில் உன் குறையை நீக்கு!
பிறமனிதர்கள் விஷயத்தில் நீ எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதை முதலில் உன் விஷயத்தில் கடைப்பிடிக்க வேண்டும்.
மற்றவர்களுக்கு ஒரு நல்ல புத்திமதியை வழங்குவதற்கு முன்னால் அந்தப் புத்திமதியை உனக்கே நீ சொல்லிக் கொள்ள வேண்டும்.
மற்றவர்களிடத்தில் நாம் என்ன விதமான குறையினைக் காண்கிறோமோ அதே குறை நம்மிடம் இருக்கிறது. என்பதை நம் உணரவேண்டும். அதன் பிறகு நம்மிடம் இருப்பதை நீக்குவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
நம்மிடமிருந்து அது முற்றிலும் நீக்கப்பட்டபிறகு மற்றவருடைய குறையை மாற்றக்கூடிய வலிமையினை நாம் அடைந்துவிடுகின்றோம்!
மனதில் உறுதி வேண்டும்
ஒரு காரியம் கடினமாக இருப்பதால் அதை எண்ணிப் பயந்துவிட்டு விடக்கூடாது. மாறாக அது எவ்வளவு கடினமாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு அதில் வெற்றி பெறுவதன் பொருட்டு நாம் அதிகமான உறுதியுடன் இருக்க வேண்டும்.
பிரகாசமான எதிர்காலம் அமைய..
நீ எப்போதும் இரக்கத்தை உடையவனாய் இரு. உனக்குத் துன்பமே நேராது. எப்போதும் திருப்தியுடனும்,சந்தோஷத்துடனும் இரு. கடுமையான விமர்சனத்தைத் தவிர்த்துவிடு. எல்லாற்றிலும் தீமையைக் காண்பதையும் தவிர்த்துவிடு. சாந்தியோடு கூடிய நம்பிக்கையும், பிரகாசமான எதிர்காலமும் அமையும்.
தவறை உணருங்கள்!
நீ ஒரு தவறைச் செய்துவிட்டாய் என்றால் அந்தத் தவறு தவறுதான் என்று உன்னால் உணரப்பட்டு அதற்காக நீ வருந்தினால் அந்தத் தவறானது கண்டிப்பாக மன்னிக்கப்பட்டு விடும்.
இன்பத்தைக் காண முடியாதவர்கள்!
முயற்சிதான் மகிழ்ச்சியை அளிக்கிறது. முயற்சியினை எவ்வாறு செய்வது என்பதை அறியாத மனிதன் தான எப்போதும் மகிழ்ச்சி இல்லாத மனிதனாக இருக்கிறான்.
ஒருவன் தன் வாழ்நாளின் துவக்கத்திலே இருந்தே சோம்பேறியாக இருப்பவர்களை ஒரு போதும் இன்பத்தைக் காணமாட்டார்கள்.
குறிக்கோளை வைத்தே வாழ்க்கை!
குறிக்கோள் இல்லாத வாவு என்பதே பரிதாபமான ஒரு வாழ்வாகும். உங்களுடைய ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு குறிக்கோள் உண்டு.
ஆனால் மறந்துவிடாதீர்கள். உங்களுடைய குறிக்கோளின் தன்மையைச் சார்ந்து தான் உங்களுடைய வாழ்க்கையின் தன்மையும் அமையும்.
பேசாதே!
எப்போதும் நீ சொல்லுவதையே செய்ய வேண்டும். ஆனால் செய்பவை எல்லாவற்றையும் பற்றிப் பேசுவது என்பது அறிவுடமை ஆகாது. நீ பேசும் போது எப்போதும் உண்மையே பேச வேண்டும். ஆனால் சில சமயங்களில் பேசாமல் இருப்பது தான் நல்லது.
கோபம்
கோபம் என்பது எப்போதுமே முட்டாள்தனமானவற்றைத்தான் பேசவைக்கும்.
வழிபாட்டைப் பொறுத்தவரை
அன்னை வலியுறுத்திய வழிபாடுகளில் மிக முக்கியமானது மலர் வழிபாடு. அன்னைக்கு மலர்களின் மீது அளவற்ற விருப்பம் உண்டு. அதன் தூய்மை, புத்துணர்ச்சி, அழகு, சுயநலமின்மை ஆகியவற்றைப் பற்றி அவர் புகழ்ந்துரைத்திருக்கிறார். ஆசிரமத்தில் தானே ஒரு தோட்டத்தை உருவாக்கி அதில் அழகான பல மலர்களை நட்டு தம் இறுதிக்காலம் வரை பராமரித்து வந்திருக்கிறார். ‘மலர்கள் இயற்கை அன்னையின் எழில் மிகு வடிவங்கள்’ என்பது ஸ்ரீ அன்னையின் கருத்தாகும்.
ஸ்ரீ அன்னை, சுமார் எண்ணூறிற்கும் மேற்பட்ட மலர்களைப் பற்றி, அவற்றை வைத்து இறைவனை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் பற்றி சாதகர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
ஸ்ரீ அன்னையின் இரக்ககுணத்திற்கு ஒரு சான்று
அரவிந்தர் ஆசிரமத்து பங்களா ஒன்றில் வயதான பரந்த மாமரம் ஒன்று இருந்தது. அது மிகவும் பரந்து விரவி, அருகிலுள்ள மற்ற மரம் செடி, கொடிகளை வளர விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. இதனால் அதை வெட்டி விட வேண்டுமென்றும் ஸ்ரீ அன்னையிடம் அதற்கான உத்தரவை மறுநாள் பெற வேண்டும் என்றும் ஆசிரமப் பாதுகாவலர் நினைத்தார்.
மறு நாள் அன்னையிடம் சென்று இது பற்றிக் கூறினார். அதற்கு ஸ்ரீ அன்னை ‘இது பற்றித் தனக்கு முன்பே தெரியும்’ என்றும், ‘மரத்தில் வாழ்ந்து வந்த ஒரு தேவதை, மரத்தை வெட்டிவிட வேண்டாமென்று நேற்று இரவு வந்து தன்னிடம் கேட்டுக் கொண்டதாகவும், ஆகவே மரத்தை வெட்ட வேண்டாமென்றும்’ கூறி தடுத்து விட்டார்.
அந்த அளவுக்கு கருணை உள்ளம் கொண்டவராக ஸ்ரீ அன்னை திகழ்ந்தார்.
எப்போதும் புன்முறுவலுடன் இருந்த அன்னை அவர்கள். மகிழ்ச்சி குறித்து இப்படிக் கூறுகிறார்.

நல்ல மனம் உடையோரால்தான் துன்பத்தைக் கண்டு சிரிக்க முடியும், எப்பொழுதும் புன்முறுவலோடு இருக்க முடியும்; மனமார்ந்த மகிழ்ச்சிக் குரலைவிட இதமானது (Cordial) வேறொன்றும் இல்லை. ஆங்கில மொழியில் Cordial என்ற சொல்லும் Courage என்ற சொல்லும் ஒரே வேரிலிருந்து தோன்றியவை. உள்ளத்திலிருந்து எழும் மகிழ்ச்சிக்குரல் இக்கட்டான வேளைகளில் ஒருவகைத் துணிவைத் தரும்.

எப்பொழுதும் ஒருவன் சிரித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் மலர்ச்சியும் அமைதியும் கூடிய மனநிலை, உள்ளத்திலே ஓர் உவகை இவை எப்பொழுதும் விரும்பத்தக்கவைகளே. இக்குணங்களால் எத்தனை அரிய தொண்டுகளெல்லாம் நிறைவேறுகின்றன!

இக்குணங்களால்தான் ஒரு தாய் தன் வீட்டை குழந்தைகளுக்கு ஓர் இன்பப் பூங்காவாக ஆக்குகிறாள், மருத்துவமனைகளிலே தாதிகள் நோயாளிகளை விரைவில் குணமடையுமாறு செய்கின்றனர், ஒரு முதலாளி தம்மிடம் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு அவர்கள் செய்யும் வேலை பெரும் பாரமாகத் தெரியாதபடி செய்கிறார், தொழிலாளிகள் பணி நேரத்தில் ஒருவருக்கொருவர் உற்சாகமூட்டுகின்றனர், தொலைத்தூரப் பயணி கடினமான பாதை வழியே தனது சகாக்களைக் அழைத்துச் செல்கிறான், தேசபக்தன் தேசமக்களின் உள்ளத்தில் நம்பிக்கை அணைந்துபோகாமல் காக்கிறான்.

இன்பக் குழந்தைகளே, நீங்கள் எப்பொழுதும் மனமகிழ்ச்சியுடனிருந்தால் உங்களால் ஆகாத செயலும் உண்டோ? என்கிறார். அன்னை

தெய்வீக அன்னையின் திருவுள உணர்வுகள் அனைத்தும் இந்த உலகத்திற்காக உருவானது. அவருடைய முயற்சிகள் ஒவ்வொன்றும் மனித வாழ்வில் தெய்வ இணைப்பை ஏற்படுத்துவதற்கு உகந்தவை. இந்த உணர்வுடன்கூடிய மாற்றமே யோக சாதனையின்போது வெளிப்பட்டு உன்னதமாகிறது. பொலிவு தருவதான உணர்வின் உருமாற்றத்தால் புதியதோர் வாழ்க்கையில் புகுவதே மனிதனின் இன்றைய முதற்கடமை. முழுமையான - நிறைவான உணர்வின் வெளிச்சத் தால், தெய்வீகப் பேரொளிப் பிழம்பான கடவு ளைக் காண்பதற்கான தருணம் வந்துவிட்டது. அதன்பொருட்டு மேலிருந்து பூமிக்கு இறங்கி வந்த ஒரு தேவதையே அன்னை! பூமிக்கு ஒளியூட்ட வந்த அந்த தேவதையின் ஆன்மிக அனுபவமே வேத அனுபவம்.

வேதத்திலும் புராணத்திலும் சொல்லப்பட்ட "பூமியுடன் தெய்வத் தத்துவம் சங்கமம் ஆகும்' என்னும் இந்த வாக்கே தெய்வீக அன்னை வழிகாட்டு வது. இறைவனின் உணர்வில் இடையறாமலிருக்க ஸ்ரீ அன்னை யின் வாசகமே திருவாசகம்.


அகமும் புறமும் ஒளிவீசும் சூழ்நிலையில் மனிதத் தன்மையை எளிதாக மாற்றிவிட இயலாது. அதற்குத் தேவையானதையெல்லாம் அளிப்பவரே ஸ்ரீஅன்னை. மனிதனின் புதுப் பிறப்பிற்கு அன்னையின் கருணைக் கடாட்சம் தான் உகந்த வழி. அவரருளாலே அவர் தாள் வணங்கிதான் அனைத்தும் அரங்கேற வேண்டும். அப்படிப் பட்ட உணர்வு ஒன்றே உணர்வின் உருமாற்றத் திற்கு அடிப்படையானது. "அதனை நடத்த வேண்டி யது நாளை அல்ல... அதிலும் இன்றே!'
1973 ஆம் ஆண்டு. நவம்பர் மாதம் பதினேழாம் தேதி. நேரம் இரவு 7.25க்கு ஸ்ரீ அன்னை மகா சமாதி அடைந்தார். அவர் மறைந்து இன்றோடு 38 ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டன. ஸ்ரீ அன்னையை இந்நாளில் நினைவு கூர்வோம். ’
அன்னையைப் போற்றிடுவோம்; அவள் பாதம் பணிந்திடுவோம்
அன்னையும் காத்திடுவாள்; என்றும் ஆனந்தம் தந்திடுவாள்

Comments

Popular posts from this blog

தமிழரின் நம்பிக்கைகள்

சிவப்பிரகாசரும் ஏசுமத நிராகரணமும்

ரெஸலுயூசன்(Resolution)