அச்சம் அறுப்போம்..... உச்சம் தொடுவோம்
அச்சம்
அறு……… உச்சம் தொடு
ஆதியில்தான்
இயற்கையைப் புரிந்தான்
இறைவழிபாடானது.
செயற்கையைப் பரந்தான்
அறிவியல் ஆனது
நிலவினைப் புரந்தான்
வானியலானது.
வெளிச்சம் கண்ட மனிதன் அன்றோ
வெற்றிக் கனியைப் பறிப்பான்
இருட்டில் கிடக்கும் மனிதன் என்று?
அச்சத் தனலை அறுப்பான்?
அச்சம் அறுத்த
கோடித் தமிழன்
கதைகள் உண்டு ஆயிரம்
தமிழா!
இனியும் ஏன் தாமதம்!
தமிழ் வீரம் விளைந்த
வரலாற்றுப் பக்கங்களை
வரிசைப்படுத்தலாம்
வா!
விரைந்து வா!
பேரிகையைத் தா
முழக்கு உன் முழவினை
அழுத்து தமிழ் அழிவினை
அச்சத்தை அம்மியில் அரைத்துவிட்டு
கடாரம், கலிங்கம், மகதம்,
மா இலங்கை
பட்டியல் நீளும்… பக்கம் போதாது….
கைத்தலம் பற்றினான் வீரன், சூரன்
தமிழ்த் தலைவன் சோழன்
அவன் அறுத்த அச்சம்
தமிழன் கண்ட உச்சம்.
பாரதி சோம்பல் முறித்த அச்சம்
பாரதம் கண்ட உச்சம்
அந்த மீசைக் கவிஞனின்
நெருப்பு வரிகளில்
வெந்து கரிந்தன்
வெள்ளையன்
வெற்றி கண்டான்
இந்தியன்
இப்படி இப்படியாய்
சொல்ல ஆயிரம் உண்டு இன்னும்
அச்சப்பட்டால்
ஏது வாழ்வு
அச்சம் கொண்டாலன்றோ வீழ்வு
உச்சம் தொட்ட மனிதரெல்லாம்
அச்சம் அறுத்த மனிதரன்றோ..
அச்சம் அச்சம் அச்சம்
பாம்பும் அச்சம் பழுதும் அச்சம்
எச்சம் சொல்ல ஒன்றும் இல்லை
எல்லாம் அச்சமே!
அச்சம் என்பது என்ன?
வெட்டி எறிய முடியாத வேதக் கருத்தா?
எல்லா தொடக்கமும்
அச்சப் புள்ளியில்
அந்த முற்றுப்
புள்ளிகள்
கோடுகளாவது
அச்சம் அறுக்கும்
வீரப் பள்ளியில்.
சொந்த உறவுகள்
செத்து மடிந்தனர்
கருணை தொலைத்து
கதவுகள் அடைத்து
அச்சம் போற்றினோம்!
வாளை வணங்கிய
வீரத் தமிழா
ஆரியன்
காலை வணங்கி
அமிழ்ந்து கிடப்பது அறிவோ?
சொந்த மண்ணில்
இந்தி பேசினால்
இனிக்கும் என்று
இழிந்து கிடப்பது செறிவோ?
சொரனை இன்றி
நிமிர்வு நடையோ….
வெட்கக்கேடு…. வெட்கக்கேடு.
அச்சம் கொண்ட மனிதரெல்லாம்
உச்சம் தொடுவதில்லை
காகம் எச்சம்கூட உரமாய் ஆகும்
பச்சைத் தமிழா பாரடா!
இன்னும் இன்னும் தாமதமோ
பாவேந்தன் சொன்ன
வரிகள் தானே ஞாபகமே.
கொலைவாளினே
எடடா மிகு
கொடியோர்
செயல் அறவே
குகைவாழ்
ஒரு புலியே உயர்
குணமேவிய
தமிழா!
நன்றி!
யாழினி வசந்தா
(ஏ.எழில்வசந்தன்)
22.05.22 திருக்கோயிலூர்
Comments
Post a Comment